Blog Archive

Friday 25 March 2011

பருவத்திற்கேற்ற கடமை
பொருள்வேண்டும் எனினும் அது மக்கட்கெல்லாம்
பொது சொத்தாய் இருக்கட்டும்; இளைஞர் எங்கும்
பொருள் ஈட்ட உழைக்கட்டும்; முதியோர் தங்கள்
புத்தி நுட்பம் தொழில் நுட்பம் போிதிக்கட்டும்
பொருள், ஆட்சி, விஞ்ஞானம், அறிவின் தன்மை,
பூதஉடல் தரமுணர்ந்தோர் அரசாளட்டும்
பொருட்கள் எல்லாம் வாழ்விற்கே என்பதல்லால்
பொருட்கட்கே வாழ்வு என்ற கருத்து வேண்டாம்.
பொருளாதாரம்
தனிமனிதன் உரிமை என்ற பிடியினின்று
சகல தொழில் நலம், வீடும் நிலம், வியாபாரம்
மனிதர் பலர் இணைந்த கூட்டுறவின் கீழே
மாறிவிடும் திட்டத்தை அமுலாய்க் கொண்டு
வினியோகம் தொழில் பொருள் என்றிரண்டிலாக்கி
வேலையின்மை, வறுமை இவையொழித்துக் காட்ட
இனியேது பொருளாதாரத்தில் எங்கும்
ஏற்றத் தாழ்வெனும் நிலைமை ஆய்வீரே.
முழு சுதந்திரம்
உணவு, உடை, இடம்பெற்று சுதந்திரமாய் வாழ
உலகமக்கள் அனைவருக்கும் உரிமையுண்டு அன்றோ?
உணவு, உடை, இடம், பணத்தால் ஒருசிலரே முடக்கி
ஒருவர் பலர் சுதந்திரத்தைப் பறித்திடுதல் நன்றோ?
உணவு, உடை, இடம் முடக்கும் ஒழுங்கறியார் கூடி
உருவாக்கும் சட்டங்கள் நீதியெனில் சரியா?
உணவு, உடை, இடம் விடுவித்துலகப் பொதுவாக்கி
ஓருலக ஆட்சியின்கீழ் சுதந்திரமாய் வாழ்வோம்.
எனது வாழ்க்கை விளக்கம் – 6
ஒழுக்கம், உழைப்பு, சிந்தனை, உயர்ந்தோர்களிடம் மதிப்பு இவற்றை மூலதனமாக வைத்தே எனது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள, இடைவிடா முயற்சியை மேற் கொண்டேன். எனினும் எனக்குப் போதிய அளவு நிறைவு கிட்டவில்லை. அடுத்தடுத்துச் சிக்கல்கள் ஏதேனும் உருவாகும். அதைச் சமாளித்து வெற்றி பெறுவதற்குள் மீண்டும் வேறு சிக்கல் கிளம்பும். மனித வாழ்வே சிக்கலுடையதுதான். அறிவாளி, மூடன், செல்வந்தன், ஏழை, வலியவன், எளியவன், படித்தவன், படிக்காதவன், இளைஞன், முதியவன், இல்லறத்தான், துறவறத்தான், ஆண்பெண் எவரென்றாலும் என்ன? வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் ஏதோ ஒன்று அல்லது பல சிக்கல்களுக்குள்ளாகித் தவித்துக் கொண்டு தான், வாழ்வை நடத்துகின்றனர், நடத்தவேண்டும். சமுதாயச் சூழ்நிலை அமைப்புதான் வாழ்க்கைச் சிக்கலுக்கு முதல் காரணம். அந்தச் சமுதாய அமைப்பு என்ற வலுவுள்ள சக்கரத்தின் சுழலில், ஒவ்வொரு மனிதனும் அவன் பொறுப்புணர்ச்சியின் அளவிற்கு அமுக்கப்பெற்றுத் தவித்துக்கொண்டே வாழ்ந்துவருகின்றான். நான் மட்டும் என்ன விதி விலக்கா? சிக்கலைக் களைந்து வாழ்வில் முன்னேற்ற மடைந்து, அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வை அடைய வேண்டுமென நான் விரும்புனேன். சமுதாயச் சூாழ்நிலை சறுக்கு மரம் போல் என்னைக் கீழ்தள்ளும். எனினும் எக்காலத்திலும் முயற்சியை நான் தளரவிட்டதில்லை. எனக்கு ஒரு முடிவு உள்ளத்தில் அமைந்திருந்தது. “நாம் வெற்றியை நாடிப் பாடுபடுகிறோம். முறையாக முயன்றால் கட்டாயம் அது கிடைக்கும். ஆனால் ஒவ்வொன்றுக்கும் கால நீளக் கணக்கு உண்டு. இடைக் காலத்தில் வெற்றி கிட்டவில்லையே என்று நினைத்தால், அது தோல்வியாகத் தோன்றும், எனவே, வெற்றி கிட்டும் வரை முயற்சி, உழைப்பு, சிந்தனை, ஒழுக்கம் இவற்றைக் கொண்டு பாடுபட வேண்டும்” என்ற முடிவு என்னிடம் அசைக்க முடியாததாக இருந்தது.
எனது திருமணம் நடந்து எட்டு மாதங்களில் எனது தம்பிக்குக் குடல் இறக்கநோய் கண்டுவிட்டது. அவனால் தறி நெய்ய முடியவில்லை. குடும்பம் பெருகி விட்டது. பொருளாதாரத்தில் அப்போதைய வாழ்விற்குப் பற்றாக்குறை அதிகமில்லை என்றாலும், முன்னேற முடியாத சறுக்கல் இருந்தது. எனது தம்பி நோய் வாய்ப்பட்டது, குடும்பப் பெருக்கம், இவை என் வாழ்விலும் பெரும்பாரமாகித் தவிர்க்க முடியாத சிக்கலாகி விட்டது. என் செய்வது? கடும் உழைப்பை ஏற்றேன், கடமைகள் ஆற்றினேன். இவ்வாறு மூன்று ஆண்டுகள் கழிந்தன. என் வாழ்வில் தோன்றிய அத்தனைத் துன்பங்களையும் எளிதில் களையவும், எழும் சிக்கல்களைச் சமாளித்து வெற்றி பெறவும், என் வாழ்க்கைத் துணைவி யமைந்தது எனது பெற்றோர்கள் செய்த தவம் என்றே, அடிக்கடி நினைந்து மகிழ்வேன். என்றாலும் சாதாரண மனிதன் சபலம் கொள்வது போல் அடிக்கடி நானும் கொள்வதுண்டு. என் மனைவியின் நிலைமை பற்றித்தான் அந்தச் சபலம். அவள் நல்ல செல்வத்தில் வளர்ந்தவள். அவள் தந்தை குதிரைப் பந்தயத்திற்குப் போகும் பழக்கம் உள்ளவர். அதிலிருந்து அவரை எவராலும் திருப்ப முடியவில்லை. பொருள் அழிந்து வறுமை எய்தியதோடு, மருத்துவத் துறையில் அவர் போதிய நினைவைச் செலுத்த முடியாமல் வருவாயும் குறைந்தது. அந்தக் காலத்தில் தான் அவள் பூப்பு அடைந்தாள். அதன்பின் மூன்று ஆண்டுகள் சென்றுதான் திருமணம் நடந்தது. வறுமையிலேயே திருமணம். வறுமையில் வாழ்பவர்கள் ஓரளவு அதைத் தாங்கும் ஆற்றலும் பெற்றிருக்கிறார்கள். செல்வத்தில் இருந்து வறுமைக்கு வந்தால், அதுதான் தாங்கொணா நிலைைமை. திருமணத்திற்குப் பின்னும் அவளுக்கு என்னிடமும் அதே நிலை நீடிக்கிறதே என்று வருந்தினேன். ஆயினும் அவள் சோர்வோ சலிப்போ குறையோ வெளிக்காட்டிக் கொள்வதில்லை. இரவு பகலாக என்னுடன் பொருள் துறையை வளமாக்குவதில் நன்கு உழைத்தாள். எளிய வாழ்க்கை நடத்தினோம். ஆயினும் எனக்கு அவள் பெருநிதி. அவளுக்கு நான் ஒரு ஒப்பற்ற நிதி. இந்த மனோநிலையில் நாங்கள் எல்லாம் உடையவர்களாக எல்லாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நன்கு ஆற்றி வாழ்ந்து வந்தோம்.
எனது வாழ்க்கை விளக்கம் – 6
எனக்கு வயது இருபத்தேழு. அப்போது ஒரு முடிவு எனக்கு ஏற்ப்பட்டது. “கூடுவாஞ்சேரிக்கு குடிபோய்விட வேண்டும். கிராம வாழ்வில் செலவு குறையும். சீசன் டிக்கெட் அப்போது மாதம் ஒன்பது ரூபாய்தான். அதற்குக் கூடுவாஞ்சேரியிலிருந்து இரண்டு படி பால் வாங்கி வந்து சென்னையில் எந்த ஓட்டலிலாகிலும் கொடுத்துவிட்டால், ரூ. 15/- கிடைக்கும். அதனால் இரயில் வண்டிச் செலவும் தள்ளிப் போகும்” என்று ஒரு நினைவு தோன்றியது. போஸ்டல் ஆடிட் ஆபிஸில் ஒரு கான்டீன் இருந்தது. இதன் செயலாளரை அணுகி, என் விருப்பத்தைத் தெரிவித்து நாள்தோறும் இரண்டுபடி பால் என்னிடம் விலைக்கு வாங்கிக் கொள்ளும்படி கேட்டேன். அவர் அன்போடும் மகிழ்ச்சியோடும் எனக்கு அத்தகைய உதவியைச் செய்வதாகக் கூறினார்.
நான் மட்டும் ஒரு மாதத்திற்கு இரயில் பிரயாண சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டேன். கூடுவாஞ்சேரியில் இருந்த எனது மற்றொரு அக்காள் வீட்டில் இரவில் தங்கி காலையில் 2 படி பால் எடுத்துக் கொண்டு எழும்பூர் வந்து அங்கிருந்து, ஒரு மைல் தொலைவில் உள்ள ஆபிசுக்கு நடந்து வருவேன். என் கணக்குப்படி நாட்தோறும் எட்டு அணா கிடைத்தது. பால் நன்றாக இருப்பதையும், கூடுவாஞ்சேரி பாலில் போட்ட காப்பி மிகவும் சுவையாக இருப்பதையும் கண்டு, மேலும் நான்கு படி ஆர்டர்கொடுத்தார்கள். அடுத்த மாதம் எனது குடும்பத்தைக் கூடுவாஞ்சேரிக்கே அழைத்து வந்து விட்டேன். மாதம் ரூ. 11/2க்கு ஒரு முழு வீடு வாடகைக்குக் கிடைத்தது. பலவிடங்களில் ஓட்டைகள் தான் என்றாலும், அதுவே எங்களுக்கு அச்சமயம் மேலாக இருந்தது. மாதம் ரூ. 50/- வீதம் பால் விற்பதில் கிடைத்தது.
அப்போது எனக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்பு ஒன்று ஆபீசில் உருவாகியது. கார்டு பையில்கள் (Guard Files) வெளியிலிருந்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். அதற்கு பதில் கழிவுத்தாள்களைக் கொண்டே பைல்கள் தயாரித்துக் கொள்ள ஒரு திட்டம் உருவாகியது. அதன்மூலம் நல்ல வருவாய் கிடைக்குமென்றும், அதை நானே கான்ட்ராக்ட் எடுத்துக் கொள்வது நல்லதென்றும், என்னிடம் அன்பு கொண்ட ஆபீஸ் சூப்பரின்டென்டென்ட் ஒருவர் கூறினார். ஆனால் ஒரு நிபந்தனை! ‘புக்பைண்டிங் திறமை பெற்றவன்’ என்று ஒரு அத்தாட்சித் தாள் கொடுக்க வேண்டும். நான் ஒப்புக்கொண்டேன். ஒரு பைண்டரைக் கொண்டு ஒரு வாரத்தில் இரவு பகலாக உழைத்துப் புக்பைண்டிங் கற்றுக்கொண்டேன். ஒரு அச்சகத்தில் எனது வேலையை நிரூபித்து அங்கிருந்து அத்தாட்சித்தாளும் வாங்கிக் கொடுத்தேன். ஆபீசில் அந்த கான்ட்ராக்டை என் பேருக்கே கொடுத்து விட்டார்கள்.
எனது வாழ்க்கை விளக்கம் – 6
கழிவுத்தாள்கள், அட்டைகள் இவற்றை ஆபீசிலிருந்து, கூடுவாஞ்சேரிக்கு நாள்தோறும் எடுத்துக்கொண்டு வந்து சேர்ப்பேன். எனது துணைவி அவற்றை ஒழுங்காக அடுக்கித் தைத்து வைப்பாள். நான் இரவில் வந்தபின் வச்சிரம் பூசி அட்டைக்கு வண்ணத்தாள் ஒட்டி, கோப்புகளாகச் செய்வோம். இவ்வாறு வருடம் ஒன்றுக்கு 1500, அல்லது 2000 பைல்கள் தயாராகும். ஆண்டுதோறும் ரூ. 300/-லிருந்து ரூ. 500/- வரையில் மொத்தமாகக் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்குள் ரூ. 600/- கொடுத்துக் கூடுவாஞ்சேரியில் ஒரு வீடு வாங்கினோம். பொருள் துறையில் முதல் வெற்றி வீடு வாங்கப்பட்டது. பைல்கள் செய்வதில் வருவாயும் சற்றுக் கூடியது. பால் விற்பனையும் ஓங்கியது. ஓரளவு பணவு மீதியிருந்தது. பால் வியாபாரத்தில் அதிக சங்கடம். வெயில் காலத்தில் சில குடங்கள் பால் முறிந்துவிடும், அவற்றிற்குப் பதில் நல்ல பால் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அதற்கென ஆள் வைத்திருந்தேன். எனினும், அவனாலும் சமாளிக்க முடியவில்லை. அந்த வியாபாரத்தை நிறுத்திவிட எண்ணினேன். அப்போது நாள் ஒன்றுக்கு ரூ. 25/- பால் மூலம் இலாப வரவு இருந்தது. எனது நண்பர் கபூர் சாயபு என்பவர் பால் விற்பனை செய்து வந்தார். அவரிடம் பால் வியபாரத்தை முழுமையாக ஒப்புவித்து விட்டேன். கையில் கொஞ்சம் பணம் இருந்தது. இதை வைத்துக் கொண்டு, லுங்கி உற்பத்தி விற்பனை நடத்த எண்ணினேன். சென்னையில் அங்கப்ப நாய்க்கன் தெருவில் மெளலானா லுங்கிக் கம்பெனி பலர் அறிந்த ஒன்று. அங்குச் சென்று லுங்கி நெசவுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டேன். எனக்கு ஞாயிற்றுக்கிழமைதான், துணி பார்வைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டேன். அப்படியே ஒப்புக் கொண்டார்கள். லுங்கி உற்பத்தி விற்பனைக்கு என் தம்பியையே நியமித்து, நான் ஆபீஸ் வேலைகளோடு, வியாபாரத்தையும் கவனித்து வந்தேன்.
நாளுக்கு நாள் பொருள் துறையில் முன்னேற்றம் கண்டேன். ஆயினும் உயிர், தெய்வம் என்ற இரண்டைப்பற்றி அறியாது திகைத்தேன். சிந்தனை மிகுந்து ஒரு நம்பிக்கை ஒளி வீசியது. எனக்கு என் ஆசான் எஸ். கிருஷ்ணாராவ் விளக்கி வைத்த பஞ்ச பூத தத்துவம் வர வர மிகத் தெளிவாக விளக்கியது, ஒரு நாள் இரவு மணி மூன்று இருக்கும்; விழித்துக்கொண்டேன். சிந்தனை மிகுந்தது, ஒரு முடிவு தோன்றியது.
“பிரபஞ்சம் ஐந்து பூதங்களும், ஆதியான தெய்வ நிலையும் சேர்ந்த, ஆறு நிலைகள் தானே கொண்டது. ஐந்து பூதங்களுக்கு அப்பால் சுத்த வெளியைத் தவிர வேறு ஏது? எனவே சுத்த வெளியேதான் தெய்வம் என்று கூறப்படுவதாக இருக்க வேண்டும். தாயுமானார் பாடியுள்ள அங்கிங்கெனாதபடி என்ற கருத்தோடு இணைத்தால், அதுதான் சரி. ஆயினும் உயிர் என்பது இந்த ஆறு நிலைகளில் எதுவாக இருக்கும். இயக்க நிலையில் உள்ளதே உயிர். ஆகவே அது பஞ்ச பூதங்களில் ஒன்றான விண்ணாகத்தான் இருக்க வேண்டும்” என்ற ஒளி போன்ற கருத்து விளங்கியது. இந்த அடிப்படையான உள்ளுணர்வை வைத்துக்கொண்டே, மேலும் சிந்திக்கத் தொடங்கினேன். என்ன வியப்பு? எனக்கு வர வர உலகமே முன்னைவிட வேறுபட்டுத் தோன்றியது. காலையிலிருந்து உறங்கப்போகும் வரையில், நான் ஈடுபடும் வேலைகளில் எல்லாம் தெய்வம், உயிர் நிலைகளின் விளக்கத்தை ஒப்பிட்டு ஆராய்வேன். ஒவ்வொரு செயலும், காட்சியும், மனிதரும், எனக்கு அவ்வப்போது மெய்விளக்கப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நூல்களாகத் தோன்றின. இந்தத் துறையில் உள்ளம் பூரித்து, மனம் அமைதி கொண்டது. எனினும் பழைய நூல்கள், புராணங்கள், கட்டுக்கதைகள், சடங்குமுறைகள், இவற்றில் அமைந்த கருத்துகட்கும், எனது விளக்கத்திற்கும், வேறுபாடுகள் இருந்தன. இவை எல்லாவற்றிற்கும் நிறைவு காண வேண்டும். உள்ளத்தின் பூரிப்போடு சில ஆண்டுகள் “பஞ்ச பூத தத்துவ விளக்கம்” என்ற பூங்காவில், அறிவைச் செலுத்தி மகிழ்ந்திருந்தேன். எந்தச் சமயத்திலும் பொருள்துறை வளர்ச்சியில், என் முயற்சியைக் குறைத்துக் கொள்ளவில்லை. காலை மணி நான்கு முதல் இரவு மணி பத்து வரையில், அயராது உழைத்தேன்.
எனது வயது முப்பத்திரண்டு ஆகியது. அப்போது, என் உள்ளத்தை மோத ஒரு நிலைமை உருவாகியது. திருமணமாகியும் எங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. இதைக் குறிப்பிட்டுக்காட்டி என் துணைவியை யார் யாரோ மனத்தைப் புண்படுத்தி விட்டார்கள். மலடி என்று இழித்துக் கூறும் வார்த்தை அவள் காதில் விழுந்தது. அதோடு மற்றும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால் தான், அவர்களுக்குக் குழந்தை என்றும் சொல்லி விட்டார்கள். பாவம் கபடமற்ற உள்ளம், வசைச்சொற் கேட்டறியாகவள், உள்ளம் வெந்து துடித்தாள். என்னிடம் இவற்றை யெல்லாம் கூறிய போது தக்க ஆறுதல் கூறினேன். எவர் என்ன சொன்னாலும், நீ காதில் போட்டுக் கொள்ளாதே. நாம் பிறருக்குத் தீங்கு செய்யக் கூடாது. மேலும் இயன்ற வரை பிறருக்கு உதவி செய்து வரவேண்டும். இந்த லட்சியத்தோடு நாம் வாழ்கிறோம். இயற்கையாக நிலவும் குழந்தைப் பேறின்மைக்கு, நாம் வருந்தவும் கூடாது. அதைப் பொருளாக வைத்து நம்மைத் தூற்றுபவர் பேச்சுக்கும், மதிப்பளிக்கக் கூடாது என்று, அடிக்கடி கூறினேன். எனினும் அவள் உள்ளம் பிறர் தூற்றும் பழிச்சொற்களால் அமைதியிழந்து தவித்தது. எனக்கு அவள் மனநிலை கண்டு சகித்துக்கொள்ள முடியவில்லை. இது ஒரு பெருஞ்சிக்கலாகி விட்டது. நாள் தோறும் நீங்கள் இரண்டாந் திருமணம் செய்து கொளளத்தான் வேண்டும் என்பாள். நான் ஆறுதல் கூறி வருவதோடு, காலையில் படுக்கை விட்டெழுந்தவுடன் கண்களை நெருடி விட்டுக் கொண்டு ஒரு பாட்டைப் பாடுவேன்.
அந்தப் பாட்டு இது தான்,
“பெண்டிரண்டு கொண்டாலும் சுகமில்லை;
பெருநெருப்பு சாமளவும் துக்கம்துக்கம்”
இதை விடாமல் பாடுவேன். என்றாலும் அவள் மனம் அமைதி பெறவில்லை. குருவிக் கூண்டைக் கலைத்துவிட்ட மாதிரி, எங்களைக் கலைத்துத் தவிக்கவிட திட்டமிட்டு விட்டது சமுதாயம்; உறவினர், சுற்றத்தார் என்ற உரிமையில். மனித வாழ்வில் எழும் சிக்கலைப் பாருங்கள்! எல்லாவற்றையும் தாங்கி வெற்றி பெற்றுத்தான் முன்னேறவேண்டும்.
சிறியது உடல் பெரியது மெய்
பெற்ற உடம்பின் பயனாய் ஊறு முதல் ஐந்து
புலன்மூலம் அனுபவித்தல் சிற்றின்பமாகும்
நற்றவத்தால் உயிரறிந்து அளவறிந்தபோது
நாம்பிறவி எடுத்தபயன் பேரின்பமாகும்
சிற்றின்பம் இன்றிப் பேரின்ப மென்பதில்லை
சிறியதுடல் பெரியதுமெய் சீவன்சிவன் உண்மை
பற்றின்றி வாழ்வில்லை அளவுமுறை கண்டால்
பற்றற்ற வாழ்வாகும் பகுத்துணர்வோம் நாமே.
விளைவறிந்த விழிப்பு
விறகதனை வாங்குகின்றோம் எரிப்பதற்கே
வேண்டிய போதல்லாது நெருப்பின் பக்கம்
மறதியினாலும் வையோம் அதுபோல் ஆண்பெண்
மணமாகா முன் நெருங்க விடக்கூடாது
உறவுகளில் பெற்றோர்கள் பெற்ற மக்கள்
உடன்பிறந்தார் குறிப்பிட்ட சுற்றம் அல்லால்
பிறருடனே ஆணோடு பெண் நட்பாகா
பிழையில்லை தொழில் வயது நாடு ஒத்தால்.
இனிது வாழ்க
உடல்நலம் நீள்ஆயுள் கல்வி செல்வம்
ஒழுக்கம் புகழ் மெய்ஞானம் இவற்றில் ஓங்கி
கடல்சூழ்ந்த நிலஉலக மக்களெல்லாம்
கடமையுணர்ந்தாற்றி பெருவாழ்வு வாழ்க
குடல்பசி யோடறிவுப்பசி நிறைவுபெற்று
குற்றமெழும் சூழ்நிலைகள் அனைத்தும் மாற்றி
இடல் காத்தல் ஈட்டல் என்ற துறைகள் மூன்றில்
ஏற்றம் பெற்றென்றென்றும் இனிதுவாழ்க.
எனது வாழ்க்கை விளக்கம் – 7
எனது வாழ்வின் அமைப்பே விசித்திரமானது. ஒருபுறம் குடும்பத்தில் சிக்கல்கள் மாறி மாறி உருவாகும்; வருந்துவேன். சிந்திப்பேன். தெளிவு பெறுவேன். துணிவு பெறுவேன். மற்றொரு புறம் தத்துவ ஆராய்ச்சியில் இடைவிடாத ஈடுபாடு. எப்போதும் சிந்திப்பேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், செயலிலும், விளைவிலும், இயற்கையின் ஒழுங்கமைப்பைக் கூர்ந்து ஆராய்ந்து தெளிவு பெறுவேன். இத்துறையில் எனக்கு நாளுக்கு நாள் இன்பம் மேலோங்கி வந்தது, இரண்டாந் திருமணம் குறித்து, என் துணைவியின் உறுத்தல், என் வாழ்வில் பெரும் சிக்கலாகிவிட்டது. எனினும் இந்தச் சிக்கல் காலத்தால் தீர்ந்துவிடும் என்று, அதை ஒதுக்கி வைத்தே மற்ற கடமைகளை ஆற்றிவந்தேன்.
பஞ்ச பூதத் தத்துவப் பூங்காவிலே அமர்ந்து, என் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வந்தேன். அப்போது என் அறிவு நாளுக்கு நாள் மேலும் மேலும் ஒளிபெற்று வந்தது. முன்னே விளக்கியபடி நான் காணும் தோற்றங்கள் அனைத்தும், பஞ்ச பூதக் கூட்டுக் காட்சிகளாகவே எனக்குத் தோன்றின. முதலில் சில நாட்கள் வரை “ஆகாசம்” என்ற நிலைதான் தெளிவாகப் புரியாமலிருந்து கடைசியாக அதைப் பற்றியும் முழுமையான விளக்கம் கிடைத்துவிட்டது. அணுவைப் பற்றியும் முழுமையான விளக்கம் கிடைத்துவிட்டது. அணுவைப் பற்றியும் முழுமையான விளக்கம் கிடைத்துவிட்டது. அணுவைப் பற்றி ஏதோ சில கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். சில பல இயக்கத் துகள்கள், ஒன்று சேர்ந்து இயங்கும் ஒரு கூட்டமைப்பே அணுவென உணர்ந்தேன். விஞ்ஞானிகள் கூறும் அவ்வணுவின் அமைப்பில் சிந்தனை ஓடியது. ஒவ்வொரு அணுவிலும் கரு அணு (Neutron), துணைக்கரு அணு (Proton) மின்னணு (Electron) என்று ஒரு கூட்டு உள்ள இயக்கம் ஒன்று உள்ளது எனில் அக்கூட்டு அமையாத தனிநிலையும் இருக்கத்தானே வேண்டும்? இந்த மூன்று வகைத் துகள்களும் அவ்வமைப்பில் பெற்ற இயக்கச் சிறப்பால் பெற்ற பெயர்களே, கருவணு, துணைக்கருவணு, மின்னணு என்பதெல்லாம் என்ற விளக்கம் கிடைத்தது. அத்தகைய தனித்த இயக்க மூலக் கூறுதான் “ஆகாசம்” எனப்படும் நுண்ணியக்க நிலை என விளங்கிக் கொண்டேன். அதன்பின் பிரபஞ்சம் முழுவதையும் ஆகாசம் (Ether) எனும் பரமாணுக்களின் தொகுப்புக் களமாகவே கருதும் ஒழுங்கு முறை என் அறிவிற்கு ஏற்பட்டது. ஆகாசம் எனும் தனி மூலக் கூறுகளின் திரட்சியால் விஞ்ஞானிகள் கூறும் அணு அமைந்தது என்றும், அம்மூலக் கூறுகளின் எண்ணிக்கைக்கேற்ப அணுவின் மூலக மதிப்புகள் (Elemental Values) பலவாக கணிக்கப் பெற்றன என்றும் உணர்ந்தேன். எந்தத் தோற்றமும் ஆகாசமும் வெளியும் சேர்ந்த கூட்டு அமைப்பாகவும், வெளியின் விகித அளவு (Proportion) குறையக் குறைய தோற்றப் பொருட்களின் திண்மை மிகுகின்றது என்றும், திண்மை மிகமிக, விளைவுகள் – அதாவது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் முதலியவை – வேறு படுகின்றன வென்றும், இந்த விளைவு வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டே ஆகாசத்தின் திரட்சி வேறுபாடுகளுக்குக் காற்று, வெப்பம், நீர், நிலம் என்ற பெயர்ப் பிரிவுகள் உண்டாயின வென்றும் உணர்ந்து கொண்டேன். ஆகாசமே, பிரபஞ்சம் எனும் பேரியக்கத் தொடர்க்களம் முழுமைக்கும் அடிப்படையான இயக்க மூலக்கூறாக இருக்க, அதன் முன்நிலை எது என்ற சிந்தனையில் மேலும் ஆழ்ந்தேன். ஆகாசத்திற்கு அப்பால் என்ன இருக்கின்றது? சுத்தவெளி தானே உள்ளது? இந்தச் சுத்தவெளிக்கும் பரமாணு எனும் ஆகாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவென்று ஆராயத் தொடங்கினேன். இதைப் பற்றிப் பலநாட்கள் சிந்தனை செய்து வந்தேன். எனக்கு அகத்தே ஒரு விளக்கமும் காட்சியும் கிடைத்தன, “வெட்ட வெளியே மெய்ப்பொருள். அதன் இயக்க நிலையே பரமாணுவெனும் ஆகாசம். தெய்வம் எனப்படுவதும் சிவம் எனப்படுவதும் சுத்தவெளியே; அதன் நுண்ணியக்க ஆற்றலே (Energy) ஆகாசம்.” மனம் விரிந்தது, நிலைத்தது. உள்ளுணர்வு மலர்ந்தது. அகத்தே எல்லையற்ற கடல் காட்சியாயிற்று. அலைகள் கோடாணு கோடி காட்சியாயின. ஒரு கவியும் உருவாயிற்று; அந்தக்கவிதான் இது.
“ஆதியெனும் மெய்ப்பொருளோ கடல்போ லொன்று;
அதிலெழுந்த இயக்கமெலாம் அலைகள் போலாம்;
பேதமுடன் அலைகளவை விரிந்த போதும்
பிரியாது கடலை விட்டுக்கடல் ஒன்றேனும்
வாதமிடும் பலகோடி அலைகளூடும்
வழுவாது நிறைந்து நின்று, முடிவில் தன்னுள்
நீதமொடு இணைத்துக்கொள் தன்மை போன்று,
நிலையற்ற இயக்கமெலாம் முடியும் மெய்யில்”
வெட்டவெளியே மெய்ப் பொருளாகவும், அதன் ஆற்றலே சக்தியெனும் ஆகாசமாகவும், அதன் திரட்சிநிலை வேறுபாடுகளே பஞ்ச பூதங்காளகவும், அவை இணைந்த கூட்டுக் காட்சிகளே பேரியக்கத் தொடர்க்களத் தோற்றங்களாகவும் விளக்கம் பெற்றேன்.
எனது வாழ்க்கை விளக்கம் – 7
சுத்தவெளி ஏதுமற்ற இடம்தானே, அதைப் பொருள் என்று எப்படிக் கூறுவது என்ற திகைப்பு முன்னர் ஏற்பட்டது. பின்னர் அதைப் பற்றிய ஐயமும் தெளிந்துவிட்டது. இயக்கத்தோடு இயக்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் கணிப்பு நிலையிலுள்ள அறிவிற்கு, வெட்டவெளி ஏதுமற்றதாக இருக்கிறது. அறிவே சமாதிநிலையில் பொருளாகவும், இயக்க நிலையில் உயிராகவும், புலன் வழியிலான காட்சி நிலையில் எண்ணற்ற இயக்க வேறுபாடுகளாகவும், இயங்கும் உண்மையினைக் கூர்ந்து தவ நிலையின் அநுபவமாக உணரும்போது வெட்ட வெளியே பொருள் என்றும் அதன் இயக்க ஆற்றவான பரமாணு உயிர் என்றும், அணுக்களின் திரட்சி நிலைகள் பலவாறான வேறுபட்ட தோற்றங்கள் என்றும், விளங்கி விட்டது. மேலும் பேராற்றல் பெற்ற கோடான கோடி சூரியன்களும் (நட்சத்திரங்களும்) மற்ற கோள்களும் வெட்ட வெளியில்தான் மிதந்து உருண்டு ஓடி இயங்கிக்கொண்டு இருக்கின்றன என்ற உண்மை தெளிந்த விடத்தில், வெட்ட வெளியே, எல்லாம்வல்ல (Almighty) பரம்பொருள் என்னும் விளக்கம் உண்டாயிற்று. இடம், இயக்கம் இரண்டையும் ஒத்தப் பார்த்தால் இயக்கத்தைவிட இடம் வலிதாகவன்றோ இருக்க வேண்டும். இவ்வாறேல்லாம் சிந்தித்துச் சிந்தித்துச் சமாதி நிலையிலும் (நிறைபேற்றுநிலை), துரிய நிலையிலும் (நிறைபேறுநிலை), புறக்காட்சி நிலையிலும் (புலனுணர்வு நிலையிலும்) நின்று நின்று பல நாட்கள் பல மாதங்கள் ஆராய்ந்து, பொருள் (Matter) ஆற்றல் (Energy), தோற்றம் (Mass), உணர்வு (Consciousness), ஆகிய நிலைகளை விளங்கிக்கொண்டேன். எல்லாம் வல்ல பரம்பொருளே ஆகாசமென்ற உயிர்த் துகள்களாய், அதன் திரட்சித் தோற்றமே உடலாய், உயிர்- உடல் கூட்டு இயக்கத்தால் உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோக, அனுபவ, ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்ற உயிரின் பத்து படித்தளப் படர்க்கை இயக்க ஆற்றலான மனமாய் இயங்கும் மறைபொருள் உண்மைகள், எனக்குத் தெளிவாக விளங்கிவிட்டன.
“ஒரே பொருள் எல்லாமாக இருக்கிறது” என்ற அத்வைத தத்துவம் விளங்கிவிட்டது. “அது மலர்ச்சிபெற்று இயக்கம் என்ற நிலை வேறுபாட்டோடு சித்து-உயிர்-ஆகாசம்-பரமாணு-சக்தி என்று பேசப்படும் ஆற்றலாக இயங்கித் திரட்சி நிலையில் உலகமாகி உயிர்களாகி அனந்தமாக இருக்கின்றன” என்ற தெளிவில் துவைத தத்துவமும் விளங்கிவிட்டது.
உயிர்களாகி, மனிதனாகி புலன் மயக்கின் தேவை, பழக்கம், சூழ்நிலைகள் நிர்ப்பந்தங்களில், சிக்கலுற்று துன்பங்களை விளைத்துக் கொண்டு தவிக்கும் நிலையிலிருந்து விடுபட்டு வாழவேண்டுமெனில், தனது அறிவை அகநோக்குப் பயிற்சியால் பண்படுத்தி, மனதின் இயக்க விதியறிந்து, உயிரின் நிலையறிந்து, அவ்வுயிரைப் பரநிலையோடு இணைத்து இணைத்து நின்று தவம் ஆற்றி, அறிவின் முழுமை பெற வேண்டும். பிறவிக் கடலைக் கடக்க இதுவே சரியான வழி. இதற்குப் பொருள்நிலை, நிகழ்ச்சி நிலையறிந்து, அகநோக்குத் தவத்தில் முழு ஆற்றல் பெற்ற ஆசான் அருளைநாடி அவர்மூலம் முறையாக நோன்பு ஆற்றியே மனிதன் உய்ய வேண்டும், என்ற விசிட்டாத்வைத தத்துவமும் எனக்கு விளங்கிவிட்டது.
எனது வாழ்க்கை விளக்கம் – 7
அறிவறியும் விளக்கத்தில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்து வந்தேனோ, அந்த அளவிற்கு என் வாழ்க்கையில் பல தடைகளும் சிக்கல்களும் உருவாகிக்கொண்டே இருந்தன. எனது இல்லத்தரசி என்னை இரண்டாந் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென, நாளுக்கு நாள் அழுத்தமாக வற்புறுத்திக் கொண்டிருந்தாள், நான் காலம் கடத்திக் கொண்டே வந்தேன்.
ஒருநாள் “காவேரி” எனும் மாத இதழில் ஒரு கதை வெளியாகி இருந்தது. அதைப் படித்து முடித்த என் துணைவி அவ்விதழை என்னிடம் கொடுத்து அந்தக் கதையைப் படித்துப் பார்க்கும்படி கூறினாள். படித்தேன்; என் கண்களில் நீர் மல்கியது. அக்கதையின் சுருக்கம் இதுதான்;
அன்பு நிறைந்த கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்திவருகிறார்கள். அவர்களுக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை. உற்றாரும் மற்றவர்களும் அப்பெண்ணைத் தூற்றுகிறார்கள். மலடி என்று மனம் நோகும்படி பழித்துக் கூறுகிறார்கள். அவள் உளம் நொந்து விட்டது. கணவனை வணங்கி, “அத்தான் நீங்கள் வேறு ஒரு பெண்ணை இரண்டாம் மனைவியாகத் திருமணம் செய்து கொள்ளுங்கள். என்மீது பழிச்சுமையும் இறங்கும். நம்குடும்பத்துக்கும் ஒரு குழந்தைப் பேறு உண்டாகும்” என்கிறாள். கணவன் மறுத்துப்பேசி அவளுக்கு ஆறுதல் கூறிவருகிறான். உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை, என் வாழ்வில் பங்குகொள்ள விரும்பவில்லை” என்று உறுதியாகக் கூறிவிடுகிறான். ‘நான் இற்ந்துவிட்டால் அப்போது நீங்கள் மறுமணம் செய்து கொள்வீர்களல்லவா?’ என்று கேட்கிறாள். ‘இவ்வாறெல்லாம் வீண் கற்பனையில் ஏன் மனதைப் புண்படுத்திக் கொள்ளுகிறாய் அமைதியோடு இரு!’ என்று கூறிவிட்டுக் கணவன் வெளியே போய்விடுகிறான். அன்று இரவு அவன் வீட்டுக்கு வந்தபோது மனைவி வீட்டில் இல்லை. தேடிப் பார்த்தார்கள். எங்கும் காணவில்லை, மறுநாள் காலையில் காவேரி ஆற்றோரத்தில் அவள் பிணம் ஒதுங்கியிருந்தது என்ற செய்தி வருகிறது. இதுதான் கதை. “உற்றார் உறவினர் பழிச் சொற்கள் ஒருபுறம் அவளைப் புண்படுத்தின; அந்த நிலைமையை உண்ர்ந்து இரண்டாந் திருமணம் செய்து தன்னைப் பழிச்சொற்களிலிருந்து விடுவிக்க மறுக்கும் கணவனின் பிடிவாதம் ஒருபுறம் அவளைப் புண்படுத்தியது. அவள் மேலும் இந்நிலையில் உயிர்வாழ விரும்பவில்லை” என்ற ஒரு பெண்ணின் மனதைப் படம் பிடித்துக் காட்ட அந்த எழுத்தாளன் அக்கதையை எழுதினான்.
பிள்ளை இல்லாத ஒரு பெண்ணைப் பார்த்து மலடி என்று உற்றார் உறவினர் தூற்றுவது எவ்வளவு கொடுமையானது என்பதை விளக்கவே, அந்த ஆசிரியர் அக்கதையை எழுதினார். ஆயினும் அவர் சிந்தனையை மேலும் விரித்துக் கதையை முழுமையாக முடிக்கவில்லை. அதைச் சற்று நீட்டி முடித்திருக்க வேண்டும். “கணவன் தனது அன்பு மனைவியின் பிரிவாற்றாமையைத் தாங்க முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறினவன் பின்னர் விடு திரும்பவே இல்லை. சில மாதங்கள் கழித்து ரிஷிகேசத்தில் ஒரு சந்நியாசி வேடத்தில் பார்த்ததாக யாரோ கூறினார்கள்” என்று முடித்திருந்தால், என் கதையும் மாறி இருக்கும். முழுமை பெறாத அக்கதை தான், என் வாழ்வின் குறுக்கீடாக ஒரு பாறாங்கல் போல் நின்றது. கதையைப் படித்தேன். எனக்கு ஒரே திகைப்பு எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ‘கதையைப் படித்து விட்டீர்களா’ என ஒரு வெற்றிப் பார்வையோடு என்னைப் பார்த்துக் கேட்டாள் என் துணைவி. ஆழ்ந்த சிந்தனையோடு மெளனமாக ஒரு பெரு மூச்சு விட்டேன். அதற்குள் அவசரமாக அடுப்பண்டை போய் விட்டாள். இராஜம் என்று கூப்பிட்டேன். அவள் பெயர் லோகாம்பாள். ஆயினும் இராஜாம்பாள் என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள். கூடுவாஞ்சேரியில் நாங்கள் விலைக்கு வாங்கிய வீட்டில்தான் அப்போது இருந்தோம். நான் கூப்பிட்டவுடன் அதற்காகக் காத்திருந்தவள்போல விரைவாக வந்தாள். அவள் முகத்தில் ஒரு வெற்றி ஒளி வீசியது. அவள் இருகரங்களைப் பற்றிக் கொண்டேன். எனது கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. “உன் மனநிலையைப் புரிந்துகொண்டேன். இனி நான் தடை சொல்வதற்கு இல்லை. உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்யையும் நிமிர்ந்துகூடப் பார்க்க விரும்பாத எனக்கு இத்தகைய நிலைவரக் கூடாது. வந்து விட்டது, விதியை ஓரளவு மதியால் வெல்லலாம். ஆனால் அந்த விதி ஒரு சிக்கலில்-சுழலில் கொண்டுவந்து விட்டு, என் அறிவு செயல்பட வொட்டாது செய்துவிட்டது. இரண்டாம் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறேன். ஆவன செய்” என்று குரல் தழுதழுக்கக் கூறினேன். அவள் பிரிவாற்றாமையைக் காட்டி அவளும் அழுதுவிட்டாள். மேலும் கூறினாள். “நீங்கள் திருமணம் செய்துகொண்டால் எந்த விதத்திலும் எங்களுக்குள் சண்டை வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று.
அச்சமூட்டிய விபத்து
ஒருநாள் நான் ஆபிசுக்குப் போகப் பஸ் ஏறக் காத்திருந்தேன். இடம் மந்தைவெளி தபாலாபீசுக்கு எதிரே. அங்கு சக்கிலி இருந்தான் எப்போதாகிலும் எனது செருப்பு காது அறுந்துவிட்டால் அவன்தான் தைத்துத் தருவான். அன்றும் அந்த மாதிரி செருப்பைத் தைக்கக் கொடுத்தேன். அவன் தைத்துக் கொண்டிருந்தான். அவன் வயிறு ஒட்டியிருந்தது. “ஏனப்பா, காலையில் நீ ஒன்றும் சாப்பிடவில்லையா?” என வினவினேன். “இல்லை” என்றான். மேலும் சொன்னான். “நேற்றிரவுகூடச் சாப்பாடு கிடையாது சாமி” என்றான். இந்தச் சொல் என்னைக் கிறுகிறுக்க வைத்து விட்டது. “ஏன் என்றேன். “நேற்று வருவாய் இல்லை சாமி” என்றான். இந்தப் பரிதாபமான வார்த்தை என் உள்ளத்தை தொட்டுவிட்டது. அவனுக்குக் கொடுக்க வேண்டியது அரையணா. ஒரு அணாவாகக் கொடுத்துவிட்டு அன்று ஆபிசுக்குப் போய்விட்டேன். “நேற்று இரவுகூட சாப்பாடு கிடையாது சாமி” என்னும் சொற்கள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன. பட்டினியின் கொடுமையை நான் உணர்ந்து இருக்கிறேன்.
இதுபோல எத்தனையோ ஏழைகள் உணவு இன்றிப் பட்டினி கிடக்கிறார்கள். இந்த நிலை எப்படி மாறும்? இந்த சிந்தனை வலுத்தது. மாலை வீட்டிற்கு வந்தேன். அன்று எனது ஆசான் வீட்டுக்குக்கூடச் செல்லவில்லை. பட்டினியைப் பற்றிய நினைவு என்னை வாட்டியது. எனக்கு ஒரு முடிவு தோன்றியது. “எத்தனையோ ஏழைகள் ஒருவேளை உணவு கொண்டும், சில சமயம் அதுகூட இன்றியும், பட்டினி கிடக்கும் போது நான் மட்டும் இரண்டு வேளை ஏன் சாப்பிட வேண்டும்? ஒருவேளை மாத்திரம் சாப்பிட்டு வந்தால் போதாதா?” என்று வினவி, அதையே முடிவாகக் கொண்டேன். அன்றிரவு உணவு உட்கொள்ளவில்லை. மறுநாளும் எனக்கு இரவு உணவு வேண்டாம் என்றும், சில நாட்களுக்கு ஒரு விரதம் எடுத்திருப்பதாகவும், என் அக்காளிடம் கூறிவிட்டேன். காலையில் எழுந்தால் உடல் காற்றில் பறப்பதுபோல இருந்தது. சிறிது நேரம் சென்று பல் துலக்கிச் சிற்றுண்டி கொண்டபின்தான், வலிவு வரும். இதைச் சரிபடுத்திக் கொள்ள நினைத்தேன். மாலையில் காலணவுக்கு வருத்த வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடத் தொடங்கினேன். பத்து தினங்களில் நிலைமை சரியாகி விட்டது. மாலையில் சாப்பாட்டு நினைவு வராது. எனினும் “உலகில் வறுமை ஒழிய நான் என்ன செய்ய வேண்டும்? அது என்னால் எப்படி முடியும்?” என்ற சிந்தனை வலுத்துக் கொண்டே வந்தது. இருபத்து மூன்றாவது வயதில், இரவு உணவு விட்டேன். இன்றுவரை அதே பழக்கம் தொடர்ந்து வருகிறது. அன்பர்கள் வற்புறுத்தலால் ஏதேனும் சிற்றுண்டி சில சமயம் கொள்வதுண்டு. பால் மாத்திரம் இரவில் விடாமல் பருகி வருகிறேன்.
எனது திருமணம் நிச்சயமாகிவிட்டது. “என் மனதுக்கு ஒத்தவளை, என் உள்ளத்தைப் புரிந்து கொண்டவளை, உயர்ந்த பண்பும் சிறந்த அறிவும் உடையவளை, நான் மனைவியாகப் பெறப் போகிறேன்” என்று எண்ணுந்தோறும், களிப்புக் கடலில் நீந்திக் கொண்டிருந்தேன். ஒரு இலட்சிய வாாழ்க்கை நடத்த, ஏற்றதோர் வாழ்க்கைத் துணைவியை நாடினேன். அடைந்தேன். சிக்கனமாகவே, திருமணம் நடந்தேறியது. எனது அன்னையுள்ளம் குளிர்ந்தது. எனது தம்பிக்கும் அதே நாளில் திருமணம் நடத்திவிட்டேன். அன்னையை என்னோடு இருக்கும் படி அழைத்து வந்து விட்டேன். என் தம்பியும் என்னோடு இருந்தான். வேறு வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு நாங்கள் வாழ்ந்தோம்.
கண்ணுக்கும் கருத்துக்கும் ஒத்த மனைவி கிடைத்தாள். போதிய வருவாய் இருந்தது. மகிழ்ச்சியுள்ள வாழ்க்கைதான். இந்தக் களிப்பில் நிறைவை எய்திவிடவில்லை. உயிர் எது? கடவுள் எங்கே? உலகில் வறுமை ஒழிவது எவ்வாறு?” இந்தச் சிந்தனைகள் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே இருந்தன.
பருவத்திற்கேற்ற கடமை
பொருள்வேண்டும் எனினும் அது மக்கட்கெல்லாம்
பொது சொத்தாய் இருக்கட்டும்; இளைஞர் எங்கும்
பொருள் ஈட்ட உழைக்கட்டும்; முதியோர் தங்கள்
புத்தி நுட்பம் தொழில் நுட்பம் போிதிக்கட்டும்
பொருள், ஆட்சி, விஞ்ஞானம், அறிவின் தன்மை,
பூதஉடல் தரமுணர்ந்தோர் அரசாளட்டும்
பொருட்கள் எல்லாம் வாழ்விற்கே என்பதல்லால்
பொருட்கட்கே வாழ்வு என்ற கருத்து வேண்டாம்.
பொருளாதாரம்
தனிமனிதன் உரிமை என்ற பிடியினின்று
சகல தொழில் நலம், வீடும் நிலம், வியாபாரம்
மனிதர் பலர் இணைந்த கூட்டுறவின் கீழே
மாறிவிடும் திட்டத்தை அமுலாய்க் கொண்டு
வினியோகம் தொழில் பொருள் என்றிரண்டிலாக்கி
வேலையின்மை, வறுமை இவையொழித்துக் காட்ட
இனியேது பொருளாதாரத்தில் எங்கும்
ஏற்றத் தாழ்வெனும் நிலைமை ஆய்வீரே.
முழு சுதந்திரம்
உணவு, உடை, இடம்பெற்று சுதந்திரமாய் வாழ
உலகமக்கள் அனைவருக்கும் உரிமையுண்டு அன்றோ?
உணவு, உடை, இடம், பணத்தால் ஒருசிலரே முடக்கி
ஒருவர் பலர் சுதந்திரத்தைப் பறித்திடுதல் நன்றோ?
உணவு, உடை, இடம் முடக்கும் ஒழுங்கறியார் கூடி
உருவாக்கும் சட்டங்கள் நீதியெனில் சரியா?
உணவு, உடை, இடம் விடுவித்துலகப் பொதுவாக்கி
ஓருலக ஆட்சியின்கீழ் சுதந்திரமாய் வாழ்வோம்.
எனது வாழ்க்கை விளக்கம் – 8
இரண்டாம் உலகப் போர்க்காலம். உலகெங்கும் போர் அச்சம் மிகுந்திருந்தது. எனக்கு ஏதேனும் சமுதாயத்திற்குப் பயனுள்ள முறையில் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. போஸ்டல் ஆடிட் ஆபீஸ் செயின்ட்ஜான் ஆம்புலன்ஸ் (First Aid) குண்டு வீச்சுப் பாதுகாப்பு (Air Raid Precaution) ஆகிய இருதுறைகளிலும் பயிற்சி பெற்றேன். துப்பாக்கிச் சுடுவது தவிர மற்ற எல்லா வகையான இராணுவப் பயிய்சிகளும் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் படைக்கு உண்டு. எல்லாவற்றிலும் ஆர்வத்தோடு பயிற்சி பெற்றேன். உடை கூட இராணுவ உடைதான். வாரத்தில் இரண்டு நாட்கள் காரியாலயத்திற்கு அவ்வுடையிலேயே செல்ல வேண்டியிருக்கும். அப்போது போர்க்காலப் பாதுகாப்பாகச் சென்னையைக் காலி செய்ய உத்திரவாகிவிட்டது. போஸ்டல் ஆடிட் ஆபீஸ் கோயம்பத்தூருக்கு மாற்றப்பட்டது. நான் உடனே அங்கு செல்ல முடியாமல் ஆறு மாதங்களுக்கு லீவு எடுத்துக்கொண்டேன். அப்போது லுங்கி வியாபாரம் ஏற்றுமதித் தடை காரணமாகச் சிறிது மந்தமாக இருந்தது. துணி விற்பனை மட்டும் சற்று முனைப்பாக இருந்தது. லீவும் முடிந்தது. மேலும் லீவு நீட்ட முடியாமல், நான் மாத்திரம் கோயம்புத்தூருக்குச் சென்று வேலையில் சேர்ந்து கொண்டேன்.
ஓட்டல் சாப்பாடு, காரியாலயத்திலேயே படுக்கை. இவ்வாறு இரண்டு மாதங்கள் கழிந்தன. எனக்கு ஓட்டல் ஒத்துக் கொள்ளாமல் உடல் நலிவுற்றது. என் துணைவிக்கு என் நிலையை எழுதினேன். நீங்கள் வந்தால் நானும் உடன் வந்து விடுகிறேன் என்று பதில் எழுதினாள். எங்கேனும் ஒரு வீடு குடியிுுருக்க ஏற்பாடு செய்துவிட்டு உடனே வருமாறு கேட்டுக் கொண்டாள். அவ்வாறே கோவைக் கோட்டைமேட்டுத் தெருவில் ஒரு வீட்டில் ஒரு அறையை வாடகைக்குப் பேசி வைத்துவிட்டு, மூன்று நாள் லீவில் கூடுவாஞ்சேரி சென்றேன். துணிக்கடையை சரியாக என் தம்பி நடத்தவில்லை. மூலதனம் மிகவும் குறைந்து போயிருந்தது. அதைச் சிறிது ஒழுங்கு செய்துவிட்டு, என் துணைவியோடு கோவைக்குச் சென்றுவிட்டேன். அங்கு சில மாதங்கள்தான் இருந்தோம். இரண்டாந்திருமணத்தைப் பற்றிய திட்டங்கள் அங்கேயே உருவாக்கிக் கொண்டோம். என் அன்னைக்கு எங்களை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. மீண்டும் லீவு எடுத்துக்கொண்டு கூடுவாஞ்சேரிக்கு வந்துவிட்டேன். பதினோரு மாதங்கள் லீவில் இருந்தேன். இதற்குள் காரியாலயங்கள் மீண்டும் சென்னைக்கு வர உத்தரவாயிற்று. அந்தச் சமயத்தில் நான் வேலைக்குப் போய்ச் சேர்ந்துகொண்டேன். காரியாலயம் சென்னைக்கு மாற்றப்பட்டது. கோவையில் நாங்களும் கூடுவாஞ்சேரியில் என் அன்னையோடு மற்றவர்களுமாகக் குடும்பம் பிரிவுபட்டிருந்தபோது எனக்கு மிகவும் சிக்கலாக இருந்தது. செழித்து வந்த பொருளாதாரம் சிறிது சிதறுண்டது. காரியாலயம் சென்னைக்கு மாற்றப்பட்ட போது அந்தப் பெரும் சிக்கல் நீங்கியது. கூடுவாஞ்சேரிக்கு வந்தவுடன் இரண்டாந் திருமண ஏற்பாடு செய்ய முனைந்தோம். எனக்கு அப்போது வயது முப்பத்திரண்டு. முதல் திருமணமாகி பத்து ஆண்டுகள் முழுமை பெறவில்லை. திருமணத்திற்கு நாங்கள் ஒப்புதல் செய்து கொண்டோம். அதுவரையில் எனது துணைவியின் தந்தையார் ஒப்புதலைப் பெறவில்லை. அதற்காக நாங்கள் மயிலாப்பூருக்குப் போனோம். அப்போது என் மனைவியிடம் ஒரு கருத்தை தெரிவித்தேன். அவள் தந்தை ஒப்புக்கொள்ளாவிடில் திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டுமென்றேன். “அவர்களைச் சம்மதிக்கச் செய்வது என் பொறுப்பு” என்றாள். மேலும் கூறினாள். “அவர் உங்கள் இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்காவிட்டாலும், திருமணம் நடக்க வேண்டியது தான். அதன் பிறகு அவரைச் சமாதானப் படுத்துவது என் வேலை” என்றாள். எனது மாமனாரை நாங்கள் அனுமதி கேட்டபோது “உங்கள் விருப்பம்போல் நடத்திக்கொள்ளுங்கள்” என்று ஒரே வார்த்தையில் கூிறிவிட்டார். இதை முனனமே என் துணைவி ஏற்பாடு செய்துவிட்டாள் போலும்.
எனது வாழ்க்கை விளக்கம் – 8 – II
கூடுவாஞ்சேரிக்கு அடுத்த நந்திவரம் கிராமத்தில் பெண் பார்த்தாயிற்று. எல்லாம் என் துணைவியின் ஏற்பாடுதான். வழக்கத்திற்கு மதிப்பளித்து, ஒரு நாள் நான் நேரில் போய் பெண்ணைப் பார்த்துவிட்டு வந்தேன். எனக்குத் தத்துவ ஆராய்ச்சியால் மனம் எவ்வளவோ தெளிவும் உறுதியும் பெற்றிருந்தது. எனினும் எனது வருங்கால வாழ்வை நோக்கிச் சிந்தித்தபோது ஒரு பெரிய புயல் வீசத் தொடங்கியது. என் உயிருக்குயிரான கண்மணி, எனது உள்ளத்தின் போக்கிறிந்து எனக்கு உதவியும், தொண்டு செய்தும் காக்க வல்லவள் என் துணைவி. அவள் இடத்தில் மற்றொரு பெண்ணைக் கொண்டு வந்து அமர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தை நினைந்து நினைந்து வருந்தினேன். கோவைக்குச் சென்றபோது தவிர மற்ற நாட்களில் நாங்கள் பிரிந்திருந்ததே கிடையாது. இரண்டாந் திருமணத்தின் மூலம் அவள் என் வாழ்விலிருந்து பெரும்பகுதி ஒதுங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை நினைந்து நினைந்து உருகினேன்.
திருமணத்திற்கு நாள் நிச்சயமாயிற்று. திருமாங்கல்யம் செய்வதற்கு ஆச்சாரியிடம் பொன் வாங்கிக் கொடுக்க வேண்டும். ஒரு நல்ல நாளைக் குறிப்பிட்டிருந்தோம். அன்று நான் ஏதோ காரணத்தால் ஊரில் இல்லை. மாலைதான் வந்து சேர்ந்தேன். “நீங்கள் இன்று மாங்கல்யம் செய்ய ஆச்சாரிக்குப் பொன் வாங்கிக் கொடுப்பதாகச் சொன்னீர்கள். நேரத்தோடு நீங்கள் வராததால் நானே ஆச்சாரியைக் கூப்பிட்டுப் பொன் கொடுத்துவிட்டேன்” என்று மகிழ்ச்சியோடு கூறினாள் என் துணைவி. எனக்கு வியப்பாயிருந்தது. இவளிடம் பொன் ஏது? பணமும் இல்லையே? எப்படி பொன் வாங்கிக் கொடுத்திருப்பாள்? என்று யோசித்தேன். உடனே அவள் “பொன் ஏது என்று யோசிக்கிறீர்களா? என் வளையல்கள்தான்; இரண்டைக் கழற்றிக் கொடுத்துவிட்டேன்” என்றாள். அவள் கைகளைப் பார்த்தேன். கைக்கு ஒரு வளையல்தான் இருந்தது. ஒரு சவரன் பொன்னில் நாலு கவரிங் வளையல்கள் போட்டிருந்தாள். அவற்றில் இரண்டுதான் அளிக்கப் பெற்றது. இரண்டாம் திருமணத் தாலியாக மாறியது. எனது உள்ளமே உருகிவிட்டது. அவள் ஒரு வெற்றிப் பார்வை வீசினாள். “என் வாழ்வில் பெரு நிதியான உங்கள் அன்பிலேயே ஒருத்திக்குப் பங்குகொடுக்கப் போகும் எனக்கு இந்தப்பொன் வளையல்களில் பங்கு கொடுப்பது பெரிய காரியமன்று” என்றாள். “வசதியிருக்கும் போது நான் மீண்டும் வளையல் செய்துபோட்டுக்கொள்கிறேன்” என்றாள். எதிர் காலத்தில் அவள் நடத்தை குடும்ப நிர்வாகத்தில் எப்படியிருக்கும் என்று எனக்கு ஒருவாறு தெரிந்துவிட்டது. அதை விளக்குவதற்கே இந்த நிகழ்ச்சி நடந்தது போலும். அவளைச் சிறுவயது முதலே நன்கு அறிவேன். ஆனால் தியாக உணர்வை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் அன்றுதான் கிடைத்தது.
ஒரு மனிதனிடம் அடங்கியுள்ள மன ஆற்றல், நட்பு அளவு அவை சந்தர்ப்பங்களால்தான் வெளிப்படும். அவள் என்ன நினைத்து வளையல்களைக் கழற்றிக் கொடுத்தாளோ என்று, எனது நினைவு ஓடியது. நாலு வளையல்களில் வரப்போகிறவளுக்கும் இரண்டு வளையல்கள் உரியவை தானே என்று நினைத்தாளோ! நல்ல நாள் என்று குறித்த தினத்தில் மாங்கல்யத்திற்குப் பொன் கொடுக்க வேண்டும் என்ற எண்ண அழுத்தத்தில் அதை அளித்தாளோ! திருமணத்திற்கு எவ்வளவோ செலவுகள் உள்ளனவோ, அதோடு பொன் வாங்குவதற்கும் ஏன் தனியே செலவழிக்க வேண்டும்; இருப்பதைக் கொண்டே அலுவலை முடிக்கலாமே என்று நினைத்தாளோ! இதன் மூலம் இரண்டாந் திருமணத்தில், நான் எவ்வளவு மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்று நிரூபித்துக்காட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டாளோ! இவை எல்லாவற்றிற்கும் அவள் தியாகச் செயல் இடமளித்தது. வசதிகளோடு அமைந்த சொந்த வீட்டை வறுமை காரணமாக விற்றுவிட்டு வாடகைக்கு ஒரு சிறிய வீட்டில் குடிபுகப் போகும் ஒருவர் உள்ளத்தில் நிலை எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது என் எதிர்கால வாழ்வை நினைக்கும்போது எனது உள்ளம். கண்ணீர் துளிர்ந்தது. மூன்று வகையில் கண்களிலிருந்து நீர்வரும். மகிழ்ச்சி பொங்கி வரலாம். துன்பம் மேலிட்டு வரலாம். கண்நோயுற்றால் வரலாம், எனக்கு கண் நோய் இல்லை. கண்ணீர் வந்தது. மகிழ்ச்சியினாலா அல்லது வருத்தத்தினாலா என்று பிரித்துக் கூற முடியவில்லை

No comments:

Post a Comment